வாழப்பாடி: வாழப்பாடியில் முடித் திருத்தகம் உள்பட 5 பெட்டிக்கடைகளில் வியாழக்கிழமை நள்ளிரவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சிகரெட் பாக்கெட்டுகள், சில்லறைக் காசுகள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இது குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் தான்தோன்றீஸ்வரர் கோயில் கட்டடத்தில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சேகர்(40). நேற்று நள்ளிரவில் இவரது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் சில்லறைக் காசுகள் உள்பட ரூ.6,500 மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றனர்.
அருகிலுள்ள கோவிந்தன் மற்றும் சக்திவேல் ஆகியோரது பெட்டிக்கடைகளிலும், வசந்த் என்பவரது முடித் திருத்தகக் கடையின் பூட்டை உடைத்து அங்கு சில்லறைக் காசுகள் இல்லாததால் திரும்பிச் சென்று உள்ளனர்.
இதையும் படிக்க: ரூ. 41 கோடிக்கு வாங்கப்பட்ட ஆந்திர இனப் பசு! கின்னஸ் சாதனை!
இதனையடுத்து, வாழப்பாடி காவல் நிலையம் எதிரே மாரியம்மன் கோவில் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் அறிவுக்கரசி(57). இவரது பெட்டிக் கடையில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிகரெட் பெட்டிகள், சில்லறைக் காசுகள் உள்பட ரூ.4,000 மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸார், இந்த சிகரெட், சில்லறைத் திருடர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடியில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட திருட்டு சம்பவம் கடந்த வாரம் பீதியை ஏற்படுத்திய நிலையில், தற்போது சில்லறைத் திருடர்கள் கைவரிசை காட்டியது இப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.