வாழ்நாள் துயரத்தில் முடிந்த Maternity Photoshoot; கவனச்சிதறலால் பறிபோன 3 வயது மகனின் உயிர்

Spread the love

பெங்களூருவின் ஜே.பி நகரைச் சேர்ந்தவர்கள், சுவாதி-சரண் ராஜ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் லக்ஷ்மீர் என்ற மகன் இருந்தார். சுவாதி தனது இரண்டாவது பிரசவத்திற்காகக் காத்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று பெங்களூரு புறநகரில் உள்ள ஸ்டுடியோவிற்கு தனது மகனுடன் சென்றிருந்தார்.

அந்த ஸ்டூடியோ வளாகம் புகைப்படங்களுக்காக மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, அங்கு 2 அடி ஆழம் கொண்ட ஒரு செயற்கைக் குளம் அமைக்கப்பட்டிருந்தது. மதியம் சுமார் 1:30 மணியளவில், அனைவரும் கேமராக்களுக்கு முன்னால் மும்முரமாக இருந்தபோது, சிறுவன் லக்ஷ்மீர் தனியாக விளையாடிக்கொண்டிருந்தான்.

சுமார் 20 நிமிடங்கள் கழித்து குழந்தையைக் காணவில்லை என்பதை உணர்ந்த சுவாதி பதற்றமடைந்தார். ஸ்டுடியோ ஊழியர்களுடன் இணைந்து தேடியபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்தச் சிறுவன் குளத்தில் விழுந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக மீட்கப்பட்ட லக்ஷ்மீர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால், அவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்தத் துயரச் சம்பவம் நடந்தபோது, சிறுவனின் தந்தை சரண் ராஜ் வேலை விஷயமாக இத்தாலியில் இருந்தார். ஒரே மகனை இழந்த செய்தி கேட்டு அவர் உடனடியாக பெங்களூரு திரும்பினார்.

இந்தச் சம்பவம் குறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டுடியோ வளாகத்தில் இதுபோன்ற நீர்நிலைகள் இருக்கும்போது முறையான தடுப்புகளோ அல்லது எச்சரிக்கை பலகைகளோ இல்லாதது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓர் அழகான நினைவைச் சேமிக்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட சிறு கவனச்சிதறல், ஒரு குடும்பத்தின் வாழ்நாள் துயரமாக மாறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *