சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச்.27) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
“விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை என முடிவாகி விட்டன. தொகுதிகள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.
திருப்திகரமான, சுமுகமான அளவில் பேச்சுவார்த்தை நடந்தது. நாங்கள் விரும்பிய தொகுதிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன.
திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் பிரச்னைகள் வெடிக்காதா? என்று காத்திருப்பவர்கள் ஏமாறப் போகிறார்கள். அப்படி கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை.
அவர்கள் சொல்வதைப்போல எங்கள் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒரு கூட்டணியில் இருக்கும்போது வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் இருக்கத்தான் செய்யும்.
இதைத்தான் எதிர் கூட்டணிக்காரர்கள் இழுபறி என்கிறார்கள். அப்படி எந்த இழுபறியும் இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை” என்று பேசியிருக்கிறார்.