இந்த நிலையில், த.வெ.க.வோடு எந்த வகையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. ஆனால், காங்கிரசில் ஆள்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட த.வெ.க. விற்கு விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர் தான் சிக்கினார்கள். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், உண்மையான காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க.வுடன் இருப்பதாக கூறுவதை விட ஒரு அப்பட்டமான பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டு. எனவே, காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கூட்டணி, மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து வருகிறது. ஆனால், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விதமாக த.வெ.க. தலைவர் விஜய் அவதூறு கருத்துகளை வெளியிடுவது பொறுப்பற்ற செயலாகும். ‘உண்மையான காங்கிரஸ் வேறு எங்கோ உள்ளது” எனக் கூறுவது, காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் மட்டுமல்ல, அரசியல் நாகரீகத்திற்கும் எதிரானதாகும். எனவே, இத்தகைய தவறான மற்றும் ஆதாரமற்ற, அவதூறு கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற்று, காங்கிரஸ் கட்சியினரிடமும், பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.