இது குறித்து ரஜினிக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பேசும் போது, “ விஜய் குறித்து எந்தவித எதிர்மறையான கருத்தையும் ரஜினி பேசியது கிடையாது. ஆனால் ஆதவ் அர்ஜூனா பேசியது ரஜினிக்கு வருத்ததை ஏற்படுத்தியது. பயந்து போனார் என்று சொல்வதை ரஜினி எப்போது ஏற்றுக் கொள்வதில்லை.
இந்த விவகாரத்தை அப்போது தனக்கு நெருக்கமான பா.ஜ.க டெல்லி பிரமுகர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார் ரஜினிகாந்த். விஜய்யுடன் கூட்டணி வரும் என்கிற நம்பிக்கையில் இந்த விவகாரத்தை கொஞ்சம் ஆறப்போட்டது டெல்லி.
இப்போது விஜய்க்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்க போவதால், ரஜினி ரசிகர்களை தங்கள் பக்கம் கொண்டுவர பா.ஜ.க திட்டமிட்டது. நேற்று டெல்லியிலிருந்து வந்த உத்தரவுக்கு பிறகுதான், ரஜினிக்கு ஆதரவாக ஒரே நாளில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் எல்லாம் வரிசையாக அறிக்கை விட்டு ஆதவ் அர்ஜூனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதோடு, ரஜினி ரசிகர்களையும் தங்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்க்கும் அரசியலை கையில் எடுத்துள்ளார்கள்.
ரஜினி இன்று வெளியிட்ட அறிக்கையிலும் “காலம் காத்திருந்து பதில் சொல்லும்“ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக பேசிய பேச்சுக்கு இப்போது கண்டனங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளது.
ஆதவ் அர்ஜூனாவிற்கான நெருக்கடி இனிதான் துவங்கும் என்பதை குறிப்பிடும் வகையில் தான், ரஜினி காலத்தை குறிப்பிட்டு சொல்லியுள்ளார். இந்த மொத்த ஆக்ஷனக்கும் பின்னால் பா.ஜ.க வின் ப்ளானே உள்ளது.தேர்தல் அரசியல் களத்தில் ரஜினியை வைத்து ஒரு ஆட்டத்தை ஆட பா.ஜ.்க முடிவெடுத்துள்ளது” என்கிறார்கள் விரிவாக.
த.வெ.க தரப்பிலும் திடீரென இந்த விவகாரம் வெடித்ததில் அப்செட்டாகியிருக்கிறார்கள். இதை எப்படி சரிகட்டுவது என்கிற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள். ரஜினி ரசிகர்களை தேர்தல் நேரத்தில் துாண்டிவிட்டு தங்களுக்கு எதிராக அரசியல் செய்ய வைக்கும் யுக்தியை பா.ஜ.க கையில் எடுத்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாரகள் த.வெ.க-வினர்.
ஆதவ் அர்ஜூனாவை வைத்து அடுத்த அரசியலை ஆட ஆரம்பித்துவிட்டது டெல்லி தலைமை.