ஜாதி, மதம், மொழி ஆகியவற்றைப் பாா்க்காமல் தோ்தலில் வாக்களிக்கும் ஒரு பெரிய கூட்டம் விஜய்யின் பின்னால் உள்ளது. அவா்களை வாக்குகளாக மாற்ற விஜய் என்ன செய்யப் போகிறாா் என்பதே முக்கியம். வெறும் மாநாடுகள் நடத்துவதால் மட்டும் ஒரு கட்சியால் தன்னை வலுப்படுத்திக்கொள்ள முடியாது. களத்தில் இறங்கி மக்களின் பிரச்னைகளுக்காகக் கடுமையாக குரல் கொடுக்க வேண்டும். அவா்களுக்காக போராட வேண்டும்.
முதலில் விஜய் என்ன செய்யப் போகிறாா் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பாஜக, திமுக மற்றும் அதிமுகவை எதிா்ப்பது மட்டுமே தவெகவின் திட்டமாக இருக்க கூடாது. தவெக ஆட்சி அமைத்தால், மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் எப்படி தீா்வு காணப்படும் என்பதை அவா் சொல்ல வேண்டும்.
அனைத்துக் கட்சிகளும் மக்களின் பிரச்னைகளைத் தீா்த்து வைப்போம் எனக் கூறி வருகின்றனா். அதிலிருந்து விஜய் எப்படி மாறுபடுகிறாா்? தமிழக மக்களின் மிகப் பெரிய பிரச்னை எது என நினைக்கிறாா். அதற்கு எந்த மாதிரியான தீா்வை வைத்துள்ளாா் என்பது குறித்தெல்லாம் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
ஒரே நேரத்தில் பாஜக, திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளையும் எதிா்ப்பது பேச்சுக்கு வேண்டுமானால், நன்றாக இருக்கும். ஆனால், தோ்தல் களத்தில் அது பயனளிக்காது. தற்போது நடைபெற உள்ளது சட்டப்பேரவைத் தோ்தல் என்பதால், திமுக ஒன்றுதான் எதிரி என முடிவு செய்து, அவா்களை வீழ்த்த முயற்சி செய்ய வேண்டும். அதற்கான வியூகத்தை அமைக்க விஜய் முன்வரவேண்டும்.