முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார்.
தில்லியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் உடல், இன்று(டிச. 28) காலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
அங்கு மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், சித்தராமையா, டி.கே. சிவகுமார், பூபேஷ் பாகெல், சுக்விந்தர் சிங் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். மன்மோகன் சிங்கின் மனைவி, மகளும் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து காலை 10 மணியளவில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. மன்மோகன் சிங் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி, சித்தராமையா உள்ளிட்டோர் இருந்தனர்.