`'விதி'படமே வக்கீல் ஆக்குச்சு!' – நீதிபதி | `84-ல் வெளியான படம்; மறக்க முடியாத அந்த ராதா' – பூர்ணிமா

Spread the love

3000 வழக்குகள், முதல் பெண் தபேதார்!

நடிகர் மோகன், நடிகை பூர்ணிமா, நடிகை சுஜாதா ஆகியோரின் நடிப்பில் எண்பதுகளில் வெளியாகி வசூலை வாரிக் குவித்த படம் ‘விதி’. படத்தில் வழக்கறிஞராக வரும் நடிகை சுஜாதாவின் கதாபாத்திரம் அப்போதே பெரிதும் பேசப்பட்டது.

இந்தச் சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணி புரிந்து அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி மஞ்சுளா, `அந்தப் படத்தின் சுஜாதா கேரக்டர்தான் தன்னை சட்டம் படிக்கத் தூண்டியதாக’ தனக்கு நடந்த பிரிவு உபச்சார விழாவில் பேசினார்.

நிகழ்ச்சியில் முதலில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்காக பெண் சிங்கமாக போராடியவர் நீதிபதி மஞ்சுளா. நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகளை கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் ஒரு பெண் நீதிபதியை இன்று இழக்கிறது” என்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் முப்பதாயிரம் வழக்குகளில் உத்தரவு பிறப்பித்திருக்கும் மஞ்சுளா, முதல் பெண் தபேதாரை நியமித்துக் கொண்டதையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தனர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்.

justice manjula

மஞ்சுளா பேசிய போது,

‘பி.எஸ்.சி முடிச்ச பிறகு எம்.எஸ்.சிக்கு இடம் கிடைச்சது. அந்தச் சமயத்துலதான் ‘விதி’ படம் ரிலீஸ் ஆகியிருந்தது. படத்தில் சுஜாதா கேரக்டர் என்னை ரொம்பவே ஈர்த்தது. அதனாலேயே சட்டத்தை தேர்ந்தெடுத்துப் படிச்சேன்’ என கூறினார்.

எல்லா மொழியிலும் ஹிட்!

இது குறித்து ‘விதி’ படததின் தயாரிப்பாளரான மறைந்த கே.பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜியிடம் பேசினோம்.

”மலையாளத்துல வெளியான படம். தமிழில் நாங்க ரீ மேக் செய்தோம். தெலுங்கு, இந்தியிலயும் வெளியாச்சு. எல்லா மொழியிலயுமே பெரிய ஹிட். தமிழைப் பொறுத்தவரை வசனம் ஆரூர் தாஸ். பட்டி தொட்டி எங்கும் வசனம் பெரிய ரீச்.

அப்ப ஆடியோ கேசட் காலம் வேறயா, அவ்வளவு வரவேற்பு தந்தாங்க மக்கள். சுஜாதாம்மா, பூர்ணிமா, மோகன்னு படத்தின் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் நல்ல வரவேற்பு தந்திச்சு படம். நான் என்ன சொல்றது? சப்ஜெக்ட் அந்த மாதிரி. நாங்க ரீ மேக் செய்த ஒரு படம் நாப்பது வருஷம் கடந்து இன்னைக்கும் அதுவும் உயர் நீதிமன்றம் மாதிரியான ஒரு இடத்துல நினைவு கூறப்படுதுனு கேக்கறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார் அவர்.

suresh k balaji

மறக்க முடியாத ராதா!

‘விதி’ படத்தின் ஹீரோயின் பூர்ணிமா பாக்யராஜிடம் பேசினோம்.

”நானும் இந்த செய்தி பார்த்தேன். ரொம்ப பெருமையா இருந்திச்சு. 1984 ல் வெளியாச்சு படம். வெளியான சமயத்துலயே சுஜாதாம்மா கேரக்டர் ரொம்ப பேரை இன்ஸ்பைர் பண்ணிய செய்திகள் வந்திச்சு. அவங்க இப்ப இல்லங்கிறதுதான் ஒரு வருத்தம்.

சினிமா பார்த்து கெட்டுப் போறாங்கனு ஒரு பொதுப்புத்தி சமூகத்துல பரவலா இருந்த காலத்துலயே எத்தனையோ பேரை நல்ல வழியில ஊக்குவிச்ச படங்களும் வெளிவந்திருக்குங்கிறதுக்கு இந்தப் படம் ஒரு பெரிய‌ உதாரணம். அந்தப் படத்தால் ஈர்க்கப்பட்டு வக்கீலாகி நீதிபதியானவங்க, நிச்சயம் தன்னிடம் வந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான தீர்ப்பைத்தான் தந்திருப்பாங்க.

பூர்ணிமா பாக்யராஜ்

எனக்குமே 42 வருஷமாகியும் இன்னைக்கும் அந்த ‘ராதா’ கேரக்டர் தர்ற அடையாளம் சும்மா சொல்லக் கூடாது. ஞாபகம் வச்சிருந்து பேசறாங்க மக்கள். அதனால இப்படியொரு படத்துல நடிச்சதை நினைக்கிறப்ப பெருமையா இருக்கு” என்கிறார் இவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *