நாடு முழுவதும் உள் நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்துக்காக விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் விமான நிலையங்களை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
வாரணாசி, புவனேஸ்வரம், அமிர்தசரஸ், ராய்ப்பூர், திருச்சி உள்பட 11 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதை மத்திய அரசு வேகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் ஆய்வு செய்தது.
குத்தகை விடுவது தொடர்பான திட்டம் குறித்த விரிவான விவரங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான ஆய்வுக்காக பொது-தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டு குழுவுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 5 பெரிய விமான நிலையங்களும், திருப்பதி உள்ளிட்ட 6 சிறிய விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டு குத்தகைக்கு விடப்படும் திட்டமிட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி முரளிதர் மோஹோல் தகவல் தெரிவித்துள்ளார்.
