நாட்டில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்களும் தப்பவில்லை.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் எல்லையில் இருக்கும் நாக்பூரில் நடைபெறுவது வழக்கம்.
இதற்காக வழக்கமாக எம்.எல்.ஏ.க்கள் விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். ஆனால் இப்போது இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையிலிருந்து ரயில் அல்லது கார் மூலம் நாக்பூர் செல்வதாக இருந்தால் 12 மணி நேரம் பிடிக்கும். எம்.எல்.ஏ.க்கள் இன்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால் அதில் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இதனால் வேறு வழியில்லாமல் எம்.எல்.ஏ.க்கள் கார் மூலமும் ரயில் மூலமும் நாக்பூர் சென்றனர்.
சிவசேனா (உத்தவ்) எம்.எல்.ஏ. அனில் பரப் ரயில் மூலம் நாக்பூர் சென்றதாக தெரிவித்துள்ளார். புனேயில் இருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளே 12 மணி நேரம் காரில் பயணம் செய்து நாக்பூர் சென்றதாக தெரிவித்துள்ளார்.