தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியான தகவல்கள்
இந்தநிலையில், 10 ஆண்டுகளில் 106 வழக்குகள் மட்டுமே பதிவானதாக வந்த தகவலால் சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த உமாராணி என்பவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களைக் கேட்டிருந்தார்.
அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து பதில் வந்துள்ளது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2014 முதல் தற்போது வரை எத்தனை லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு, 106 வழக்குகள் எனப் பதில் வழங்கப்பட்டுள்ளது.
எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் எனக் கேட்டதற்கு, 29 வழக்குகளில் 46 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விருதுநகர் நகராட்சியில் 2014-15 இல் சாலை அமைப்பதில் ஊழல் ஏதும் நடைபெற்றதா? அதில் யாருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?’ என்ற கேள்விக்கு, ‘குற்ற வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. முதல்நிலை விசாரணை பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளனர்.
எனவே, லஞ்சம், ஊழல் தடுப்பு தொடர்பாகப் போதிய விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு தரப்பில் ஏற்படுத்த வேண்டும். அரசுத் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
லஞ்சம் தொடர்பான புகார்களை அளிப்போருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.