சென்னை: மதுபான விற்பனை விவரம், டாஸ்மாக் கணக்கில் செலுத்திய தொகை இடையே மாறுபாடு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபானக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ ஆகியவை மூலம் நடைபெறும் நிகழ்வுகளில், மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் மட்டுமே அவைகளை விற்பனை செய்து இருக்க வேண்டும்.
இந்த நடைமுறையில் வேறுபாடு நிகழக் கூடாது. ரொக்கம், கார்டு மற்றும் யுபிஐ மூலம் மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை தொகை பெறப்பட்டிருந்தால், பெறப்பட்ட முழு தொகையினையும் அப்படியே டாஸ்மாக் கணக்கில் செலுத்த வேண்டும்.
மதுபானக் கடைகளில் தினந்தோறும் கணினி மயமாக்குதலுக்காக வழங்கப்பட்ட கையடக்க கருவியில் உள்ள ரொக்க விற்பனை மற்றும் கார்டு மூலம் நடைபெற்ற விற்பனையை கடை பணியாளர்கள், வங்கியில் செலுத்திய பணம் மற்றும் கார்டு மூலம் நடைபெற்ற விற்பனை விவரங்களையும் ஒப்பீடு செய்து வேறுபாடு கண்காணிக்க வேண்டும். மேலும், மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் இந்த பணியினை ஒரு இளநிலை உதவியாளருக்கு பணி ஒதுக்கீடு செய்து கண்காணிக்க வேண்டும்.
இதற்காக தனியாக கோப்பு தயார் செய்து மாவட்ட மேலாளருக்கு தினமும் சமர்ப்பிக்க பணிக்க வேண்டும். ரொக்கத்தில் விற்பனை செய்த தொகை முழுவதும் அந்தந்த மதுபானத்துக்கு உரிய அதிகபட்ச சில்லறை விற்பனைத் தொகையில், அதாவது, அவை முழுவதற்கும் உரிய அதிகபட்ச சில்லறை விற்பனை தொகையின் கூட்டுத் தொகையில் எந்த குறைபாடும் இன்றி அடுத்த நாள் வங்கியில் செலுத்தப்பட்டதா என சரிபார்த்து தினசரி உறுதி செய்ய வேண்டும். இதில் குறைபாடு இருப்பின், அதனை விற்பனை தொகை கையாடல் செய்துள்ளதாக முடிவு செய்து அது தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதாவது, குறைவுத் தொகையை முழுவதுமாக வசூல் செய்தல், குறைவுத் தொகை மீது 50 சதவீதம் அபராதத் தொகை வசூல் செய்தல், குறைவுத் தொகை மீது 2 சதவீதம் மாதவட்டி வசூல் செய்தல், அபராத தொகை மற்றும் வட்டித் தொகை மீது ஜிஎஸ்டி வசூல் செய்தல். மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளும் விடுதலின்றி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அனைத்து விற்பனைகளின் விற்பனை விவரங்கள் முழுமையாக தொகுத்து கண்காணிக்கப்பட வேண்டும். ஏதேனும் ஒரு கடையில் மாறுபாடுகள் இருப்பின், அந்த கடையினை அன்றைய தினமே முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.