ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கபபட்டன.
வங்கக்கடலில் உருவாகிய ஃபென்ஜால் புயல் கரையைக் கடப்பதற்கு முன் நவம்பர் 30-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கிய மழை, புயல் கரையைக் கடந்த பின்னரும் டிசம்பர் 1-ஆம் தேதி இரவு பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த பெரும்மழையால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின.
பல்வேறு ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்கள் பெரும் அவதியை சந்தித்தனர். குடியிருப்புகள் சேதம், நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நாசமடைந்த நிலையில், சாலைகள், கட்டடங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன.
ஆர்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகம் மூடப்பட்டதைக் கண்டித்து அனைத்துக் கட்சியினர் முற்றுகை
புயல் எச்சரிக்கையாக நவம்பர் 29-ஆம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. புயல் கரையைக் கடந்த பின்னர் மழை கொட்டித் தீர்த்த மழையால் பள்ளிகள் முன்பு மழைநீர் தேங்கியது. மழை நின்ற பின்னரும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் சீரமைப்புப் பணிகள் நடை பெற்று வந்தன.
இதன் காரணமாக கடந்த 10 நாள்கள் மூடப்பட்டிருந்தன. அனைத்துப் பணிகள் முடிந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு மேல்நிலைப் பள்ளி உள்பட 7 பள்ளிகளைத் தவிர மாவட்டத்தில் 1288 அரசுப் பள்ளிகள், 501 தனியார் பள்ளிகள் 10 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
மழையால் புத்தகங்களை இழந்த மாணவ – மாணவிகளுக்கு மீண்டும் வழங்கப்பட்டன.