இந்தக் கோயிலில், பூஜை நடைபெறும்போது புற்று மண்ணைத் தண்ணீரில் கலந்து பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அருந்தினால் புத்திர பாக்கியம் கிடைக்கும், நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை.
தொடர்ந்து மூன்று அமாவாசை தினங்கள் மேல்மலையனூர் கோயிலுக்குச் சென்று, அங்கு நடைபெறும் ‘ஊஞ்சல் உற்சவம்’ விழாவைத் தரிசித்தால் குழந்தைப் பேறு, திருமணப் பேறு உள்ளிட்ட அனைத்து விதமான பேறுகளும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
அமாவாசை தினத்தில் நாள் முழுவதும் கோயில் திறந்தே இருக்கும். மனபயம் உடையவர்கள் எதிரிகளால் தொல்லைக்குள்ளானவர்கள் ஆகியோருக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது மேல்மலையனூர்.
ஆடி வெள்ளிக்கிழமைகள், நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல், மாசி தேர்த் திருவிழா ஆகியவை மேல்மலையனூரில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களாகும். இந்தத் திருவிழா காலங்களில் அம்மனைத் தரிசித்தால் ராகு – கேது தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

அங்காள பரமேஸ்வரிக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்தி வழிபட்டால், அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள். அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினால் கணவனைப் பிரிந்திருக்கும் மனைவி, கணவனால் துன்புறுத்தப்படும் பெண்கள் ஆகியோரின் பிரச்னைகள் நீங்கும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
சித்தம் கலங்கியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மலையனூருக்கு அழைத்துச் சென்றால், விரைவில் அவர்களின் மனநோய் குணமாகும் என்கிறார்கள், பக்தர்கள்.
பிரம்ம கபாலத்தை அழித்தபிறகு, அங்காள பரமேஸ்வரி திருவண்ணாமலைக்குச் சென்று, தீர்த்தத்தில் மூழ்கி சாப விமோசனம் பெற்றாள் என்றும் கூறுகிறார்கள். ஆகவே, திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டு விட்டு, மேல்மலையனூருக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.