விவகாரம் புரியாமல் வாழ்த்திய ப.சி; சித்தரஞ்சன் சாலையைச் சுற்றவிட்ட நால்வர்; கதர் சட்டையினரின் ரகளை

Spread the love

திமுக – காங்கிரஸ் கூட்டணியை இழுத்துப் பிடித்து சேர்த்து வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

பதைபதைத்துப் போய் ப.சிதம்பரம், சித்தரஞ்சன் சாலையைச் சுற்றிவர சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மகிழ்வைக் கொடுத்த ஒரு அறிவிப்புதான் காரணமென்பதே இந்த அரசியலாட்டத்தின் பெரும் சுவாரஸ்யம்.

சித்தரஞ்சன் சாலையில் ப.சிதம்பரம்
சித்தரஞ்சன் சாலையில் ப.சிதம்பரம்

திமுக – காங்கிரஸ் இடையேயான பஞ்சாயத்து கடந்த அக்டோபர் – நவம்பரிலேயே புகைய ஆரம்பித்துவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி மேல் பேட்டியாகக் கொடுத்து கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மாணிக்கம் தாகூரும் கோதாவில் இறங்கத் தயாராகியிருந்தார்.

காங்கிரஸ், விஜய்யுடன் பேசிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் தீயாகப் பரவி வந்தது. அந்தச் சமயத்தில்தான் நவம்பர் 22 ஆம் தேதி ஒரு சனிக்கிழமையில் காலை 7:43 க்கு ப.சி ஒரு ட்வீட்டைப் பதிவிட்டிருந்தார். ‘தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்

‘இந்தியா கூட்டணி’ யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது

அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்’ என்பதுதான் அந்த ட்வீட்.

சிதம்பரம் ட்வீட்
சிதம்பரம் ட்வீட்

அடுத்த சில மணி நேரங்களில் டெல்லியிலிருந்து அறிவிப்பு வந்தது. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அறிவிக்கப்பட்டது. எந்தப் புகைச்சல் முடிவுக்கு வரும் எனப் ப.சி மனப்பூர்வமாக நம்பினாரோ அந்தப் புகைச்சலை மேலும் கொளுந்து விட்டு எரிய வைத்தார் கிரிஷ் சோடங்கர்.

அமைச்சரவையில் பங்கு, அதிக சீட்டுகள் என மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் பேசியதற்குத் துணையாக நின்றார் சோடங்கர். அறிவாலயத்தில் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு டெல்லி போய் ‘திமுக கொடுக்கும் 25 சீட்டுகளுக்கெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது’ என்றார்.

ஸ்டாலின், சோடங்கர் என்கிற பெயரைக் கேட்டாலே எரிச்சலடையும் நிலையை ஏற்படுத்தினார். திமுக – காங். இடையிலான விரிசலை இன்னும் அதிகப்படுத்தினார்.

அரசல் புரசல் வதந்திக்கெல்லாம் முடிவுகட்டி கூட்டணியைச் சுமுகமாகக் கொண்டு செல்ல உதவுமெனப் ப.சி நினைத்த அதே குழுதான், இன்றைக்கு அவரை சித்தரஞ்சன் சாலையை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓட வைத்திருக்கிறது. அரசியல் கற்பனைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை ப.சி இன்னொரு முறை உணர்ந்திருப்பார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *