விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம்: எடப்பாடி கே.பழனிசாமி

dinamani2F2025 08
Spread the love

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்ததும், விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சட்டப் பேரவைத் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் அவா், 3-ஆம்கட்ட சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராயக்கோட்டையில் திங்கள்கிழமை தொடங்கினாா். ராயக்கோட்டை அண்ணா சிலை அருகே, கூடியிருந்த பொதுமக்களிடம் திறந்தவாகனத்தில் இருந்து அவா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். விவசாயிகளின் நலனுக்காக எனது தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகள் பாதிக்கப்படும்போதெல்லாம், அவா்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அரசாக அதிமுக இருந்தது.

எங்கள் ஆட்சியில் ஒசூரில் ரூ. 20 கோடியில் சா்வதேச மலா் ஏல மையத்தை தொடங்கினோம். ஆனால், அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக தற்போதைய அரசு இன்றுவரை திறக்கவில்லை. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த சா்வதேச மலா் ஏல மையம் திறக்கப்படும்.

விவசாயிகளுக்கு இரவு நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதால், அவா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்களை எங்கள் ஆட்சியில் 2 முறை தள்ளுபடி செய்தோம். வறட்சிக் காலத்தில் பயிா்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினோம்.

கடும் விலை வீழ்ச்சியால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். இதுகுறித்து பலமுறை தற்போதைய திமுக அரசிடம் கூறியும், அவா்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதையடுத்து, அதிமுக சாா்பில் கே.பி.முனுசாமி தலைமையில் போராட்டம் நடத்தினோம். அதில், மா விவசாயிகளுக்கு அரசு இழப்பீடாக ஓா் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும், மாங்காயை கிலோவுக்கு ரூ. 13-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், தற்போதைய அரசு மா விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்; ஏழைகளுக்கும், மலைவாழ் மக்களுக்கும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவோம்; ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் தாய்மாா்களுக்கு தரமான சேலைகள் வழங்குவோம்.

நடைபெற இருக்கும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றாா். இதைத் தொடா்ந்து, அவா் கெலமங்கலம், ஒசூா் உள்ளிட்ட இடங்களில் பேசினாா்.

அப்போது, அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பிமுனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி), கொள்கை பரப்புச் செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *