கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள புகழூர் பாலதுறை என்ற இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“கரூரில் முக்கிய பாசன வாய்க்காலான புகழூர் ராஜ வாய்க்கால் மூலம் கரூர் மாவட்டம் வாங்கல், நெரூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக கடந்த நவம்பர் மாதம் இந்த வாய்க்கால் அடைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி இந்த பணிகளை விடியா தி.மு.க அரசு கிடப்பில் போட்டு விட்டது. கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் வராததால் வாங்கல், நெரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க அரசு நினைத்திருந்தால் விரைந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை முடிக்க உத்தரவிட்டு இருக்கும். விவசாயிகள் மீதும் விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீதும் தி.மு.க அரசுக்கு அக்கறை இல்லை. உடனடியாக பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். இல்லை என்றால், அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆலோசனை பெற்று உடனடியாக இந்த பகுதியில், விவசாயிகளைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள வெப்பத்தின் தாக்கம் காரணமாக கடைமடை வரை உள்ள விவசாய பயிர்கள் கோரை, வாழை, தென்னை போன்ற பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை சாலைவிரிவாக்க பணிகளுக்காக விவசாயிகள் மீது அக்கறையின்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன வாய்க்காலை மூடியது குறித்து இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலின் போது மக்களிடம் பதில் சொல்லி ஆக வேண்டும்.

தமிழகத்தில் இரண்டு அமாவாசைகளுக்கு பிறகு தி.மு.க ஆட்சி அகற்றப்பட்டு இருக்கும்” என்றார். அதேபோல், காவிரி ஆற்றில் அரசு அனுமதியுடன் அள்ளப்பட்ட மணல் குவாரிகள் நிறுத்தப்பட்ட இடத்தில், தற்போது இரவு பகலாக மணல் திருட்டு நடைபெறுகிறது.
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு போன் செய்தால் யாரும் எடுப்பதில்லை. மேலிருந்து அழுத்தம் வருகிறது என்று கூறும் அரசு அதிகாரிகளால், மணல் கொள்ளையை தடுக்க முடியாத அவல நிலை கரூர் மாவட்டத்தில் நிலவுகிறது. இதைப் பார்த்து மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று ஆளுங்கட்சி நினைக்கின்றது. மக்கள் அனைவருக்கும் அனைத்தும் தெரியும். முற்றிலும் மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு குடிநீர் கிடைக்காத அவல நிலை ஏற்படும் அடுத்தது திண்டுக்கல் ராமநாதபுரம் வரை பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் காவிரி ஆற்றை நம்பி தான் உள்ளது. இதனால் ஏற்படும் வறட்சியால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். புகலூர் தடுப்பணை என்பது கிட்டத்தட்ட 1 டி.எம்.சி அளவுக்கு நீர் தேக்கக்கூடிய கொள்ளளவு கொண்ட தடுப்பணை. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

அதற்கான ரூ. 450 கோடி நிதியை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பெற்றுக் கொடுத்தார் என பொதுவெளியில் பேசி வருகிறார். படத்தில் வரும் வசனத்தை போல, மாப்பிள்ளை அவர்தான், ஆனால், சட்டை என்னுடையது என கூறுவதைப் போல செந்தில் பாலாஜி புகழூர் கதவணைக்கு நிதி பெற்றுக் கொடுத்தார் என்று பேசுவது நகைச்சுவை.
நான் தான் முன்னாள் முதலமைச்சரிடம் பேசி, நிதியை ஒதுக்கீடு செய்து பெற்றுக் கொடுத்தேன் என்பதை பொதுவெளியில் நிரூபிக்க முடியும். திட்டம் துவங்கி ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால், இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள விடியா தி.மு.க அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து கதவணை பணிகளை தீவிரப்படுத்தவில்லை” என்றார்.