‘இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான் பாடலாசிரியரிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கிறேன்’ எனவும் சொன்னார். பிறகு ‘வசனங்கள் எழுதுவீர்களா?’ எனவும் ராஜமெளலி சார் கேட்டார். ‘நிச்சயமாக நான் ‘எந்திரன்’ திரைப்படத்தில் வசனப் பணிகள் மூலமாகத்தான் அறிமுகமானேன்.’ என்றேன். ‘அது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! தெரிந்திருந்தால் உங்களை அழைத்திருப்பேனே..’ எனவும் சொன்னார். இந்தப் பாடல்தான் என் மீது ராஜமெளலி சாருக்கு நம்பிக்கை கொடுத்தது எனலாம்.
அதன் பிறகுதான் ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களில் எங்களுடைய பணி தொடர்ந்தது. இந்தப் படத்தின் பாடல்களை மட்டும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் பிடித்தார்கள். ‘கொஞ்சம் உளறிக் கொட்டவா’ பாடலுக்கு தமிழ் வரிகளின் லிப் சிங்கும் இருக்கும்.” என்றவர், ” ‘நான் ஈ’ படத்திற்கு கிரேசி மோகன் சார்தான் வசனம் எழுதினார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எனக்காக அவரொரு வெண்பாவை எழுதிக் கொடுத்தார். ‘தாயாரா தந்தையாய் யார் உன்னை வாயார வாழ்த்தியது, வாரிசு செய்யாரே, யாக்கி கொடுத்தார் எதுகைக்கும் மோனைக்கும் காக்கி சினிமாவைக் கலக்கு’ என எழுதிக் கொடுத்தார். இது மறக்க முடியாத பாராட்டு!” என்றார் புன்னகையுடன்.