Last Updated:
பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு நபர் தனது 30 கி.மீ. தூர பயணத்திற்கு நான்கு மணி நேரம் செலவிட்டுள்ளார். இதனை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு நகரம் எப்போதுமே போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் போனது. சிறிய மழை பெய்தால் கூட நிலைமை இன்னும் மோசமடைந்து விடுகிறது. இந்த வார தொடக்கத்தில், பெங்களூரு நகரம் பலத்த மழையை எதிர்கொண்டது. இதனால் சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக வாகனத்தில் செல்வது மிகப்பெரும் சவாலாக மாறியது. மழை காலங்களில் வீட்டுக்குச் செல்வது தாமதமாகும் என்பது சாதாரண விஷயம் என்றாலும், ஒரு தொழில்நுட்ப வல்லுநரின் அனுபவப் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்ல கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் அவதிப்பட்டுள்ளார்.
சுதீப் பி நம்பியார் என்ற நபர், பிரபல சோசியல் மீடியாவான எக்ஸ் தளத்தில் தனது வீட்டிற்குச் சென்ற விவரங்களைப் பகிர்ந்துள்ளார். மாலை 5:30 மணிக்கு வைட்ஃபீல்டில் வேலையை முடித்துவிட்டு, 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள யெலஹங்காவிற்கு செல்ல தயாரானார். ஆனால், மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அவர், இரவு 9:30 மணிக்கு தான் வீட்டை அடைந்தார்.
“பெங்களூரு – மழை – ட்ராஃபிக். நேற்று நான் மாலை 5.30 மணியளவில் வைட்ஃபீல்டில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணியளவில் யெலஹங்காவில் உள்ள வீட்டை அடைந்தேன். மழை மற்றும் போக்குவரத்து நெரிசலால் 30 கிலோமீட்டர் தூரத்தை அடைய சுமார் 4 மணிநேரம் ஆகியிருக்கிறது! நேற்று முன்தினம் 3.5 மணி நேரம். கடந்த வாரம் 3 மணி 15 நிமிடம். ஆறு மாதங்களுக்கு முன்பு, அது 1 மணி 45 நிமிடங்களாக இருந்தது. இப்படி ஒவ்வொரு நாளும் சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன! இது எப்போது முடிவடையும்?” என தனது பதிவில் வேதனையோடு பகிர்ந்துள்ளார்.
இவருடைய பதிவு உடனடியாக சமூக வலைதளத்தில் வைரலகத் தொடங்கியது. இந்தப் பதிவு பலவிதமான எதிர்வினைகளைப் பகிர்ந்து கொண்டதோடு சமூக ஊடக பயனர்களிடையே உற்சாகமான விவாதத்தைத் தூண்டியது. பலர் வீட்டிலிருந்து வேலை செய்வது பெங்களூருவிலிருந்து இடமாற்றம் செய்வது எனப் பல ஆலோசனைகளை வழங்கினர்.
“நகர உள்கட்டமைப்பு வாகனப் போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லாத நிலையில், நிறுவனங்கள் ஏன் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வலியுறுத்துகின்றன?” என ஒரு யூசர் கேள்வி எழுப்பினார்.
“இப்படியான இக்கட்டான நாட்களில் உங்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்குமாறு நீங்கள் ஏன் முதலாளியிடம் கேட்கக்கூடாது? ஆம், நகர உள்கட்டமைப்பின் பரிதாபகரமான நிலையைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற நிகழ்வுகள் நிறைய இருக்க தான் செய்யும். நம் என்ன செய்ய” என மற்றொரு நபர் வேதனையோடு பகிர்ந்துள்ளார்.
#Bengaluru x Rain x Traffic 😭
So yesterday, I left my office in Whitefield at around 5.30 pm and reached home in Yelahanka by around 9.30 pm. That’s approximately 4 hrs on the road for 30 km in rain and traffic! 😭The day before yesterday, it was 3.5 hrs. Last week it was 3… pic.twitter.com/E2WXY6t7q7
— Sudeep P Nambiar (@SudeepNbr) October 23, 2024
இப்படி பல ஆலோசனைகள் தனது பதிவிற்கு வந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக நம்பியார் தனது எண்ணங்களைப் அடுத்த பதிவில் பகிர்ந்து கொண்டார். “வீட்டிலிருந்தே வேலை செய்கிறோம் என கேட்பவர்களுக்கு இது ஒரு ஆடம்பரமான விஷயம். இது அனைவருக்கும் எளிதில் கிடைக்காது. சிலர் 5 நாட்களும் அலுவலகம் செல்ல வேண்டும். ஒயிட்ஃபீல்டுக்கு மாறக் சொல்பவர்களுக்கு – நான் எனது சொந்த வீட்டில் தங்கியுள்ளேன். அடிக்கடி வீடு மாறுவது எளிதல்ல. பணியிடத்தை மாற்றக் கேட்பவர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்; செய்வதை விடச் சொல்வது எளிது! ஆனால் நிங்கள் கொடுத்த பரிந்துரைகள் அனைத்திற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!” எனப் பகிர்ந்துள்ளார்.
இவருடைய பதிவு தற்போதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் பெற்றுள்ளது.
October 31, 2024 9:10 PM IST
