சென்னை: அம்பத்தூரில் ஒரு வீட்டுக்கு ரூ.91,993 மின் கட்டணம் வந்ததால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் மீட்டர் ஆய்வு செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டுதோறும் மின் கட்டண உயர்த்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை அடுத்த அம்பத்தூரில் ஒரு வீட்டுக்கு ரூ.91,993 மின் கட்டணம் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் திருவல்லீஸ்வரர் நகரை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் வீட்டில் 2 மாதத்துக்கு சராசரியாக 450 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 2 மாதத்துக்கு ஒருமுறை ரூ.1,500 முதல் ரூ.2.000 வரை மின்கட்டணம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில், நந்தகுமார் வீட்டில் ஜூலை மாத கணக்கீட்டின் படி 8,370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக, ரூ.91,993 மின்கட்டணம் வந்துள்ளது. இதைப் பார்த்ததும் நந்தகுமாரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக, இது தொடர்பாக, சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள மின் வாரிய அலுவலக அதிகாரிகளிடம் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில், விசாரணை நடத்தி தவறுக்கான காரணம் கண்டறியப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், மீட்டர் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தவறு நடந்திருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.