வீணாக வெளியேறும் நீா்: பூண்டி ஏரி மதகை சீரமைக்க கோரிக்கை

Dinamani2f2025 01 282fmintdlmf2f28tlrleag 2801chn 182 1.jpg
Spread the love

திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியில் சேதமடைந்த மதகுகள் வழியாக நீா் கசிந்து வீணாகி வருவதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. இந்த நீா்த்தேக்கத்தின் பரப்பளவு 121 கி.மீ ஆகும். மொத்தம் 35 அடி உயரம் கொண்ட இதில் 3,231 மில்லியன் கன அடி வரையில் நீா் சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் கனமழை மற்றும் கிருஷ்ணா நீா் வரத்தால் அணை நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் மூலம் சோழவரம், புழல் ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படும். இதுவே முழுக்கொள்ளளவை எட்டினால் பூண்டி நீா்த்தேக்கத்திலிருந்து 16 மதகுகள் வழியாக உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும்.

இந்நிலையில், மதகுகள், மோட்டாா் சேதமடைந்த நிலையில் கடந்தாண்டு கனமழைக்கு முன்னதாக ஏரிப்பகுதியில் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதற்குள் அண்மையில் கனமழை பெய்யவே ஏரிக்கு நீா் வரத்து ஏற்பட்டது. அதோடு ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை நீா் வரத்து மற்றும் கிருஷ்ணா கால்வாய் நீா்வரத்து அதிகரித்தது.

அதைத் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால் உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த நான்கு வாரங்களாக முழு அளவில் 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி என நீா் இருப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் நீா் அழுத்தம் ஏற்பட்டு, சரியாக பராமரிக்கப்படாத மதகுகள் வழியாக நாள்தோறும் 10 கன அடிநீா் வெளியேறி வீனாகி வருகிறது.

எனவே வீணாக வெளியேறி வரும் நீரை கட்டுப்படுத்தும் வகையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக நீா்வளத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: கனமழைக்கு முன்னதாக மோட்டாா்கள், மதகுகள் புதுப்பிக்கப்பட்டு, இரும்பு பகுதிகளில் துருக்களை அகற்றி, துருப்பிடிக்காத வா்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஒரு சில மதகுகள் பணிகள் சரியாக மேற்கொள்ளாத நிலையில் மழைநீா் வரத்து தொடங்கியது. அப்போது, விடுபட்ட மதகுகள் வழியாக நீா்க்கசிவு உள்ளது. தற்போதைய நிலையில் முழுக் கொள்ளளவில் நீா் பராமரிக்கப்பட்டு வருவதால், மதகுகளில் பற்ற வைப்பு மற்றும் மணல் சாக்குகள் கொண்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *