விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து நடந்து வரும் பாலியல் குற்றங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தாமல் தவறியதாக, திமுக அரசைக் கண்டித்து இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது.
இங்கு, சி.வி.சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சி.வி. சண்முகத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.
தேர்தல் களத்தில் கருத்துரீதியாக கட்சிகள் எப்படி கொள்கைரீதியாக வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டியிருக்கிறது.
ஆனால் தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரியை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். சரி மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கித் தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும்.