தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் தனி தொகுதி. இங்கு தி.மு.க சார்பில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ இளமதி சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யபாரதி, த.வெ.க சார்பில் பிரபாகரன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். அனைத்து வேட்பாளர்களும் தொகுதிக்குள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், ஆடுதுறை பேரூராட்சியில் தொடங்கி கோவிந்தபுரம், வண்ணக்குடி உட்பட 12 கிராமங்களில் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெயில் கடுமையாக அடித்ததால் வெப்பம் அதிகமாக இருந்தது. போகப் போக வெயில் அதிகமானதால் வண்ணக்குடியில், பிரசாரம் செய்துகொண்டு இருந்த இளமதி சுப்பிரமணியன் வெயில் தாங்க முடியாமல் திடீரென மயங்கினார். அங்கிருந்த நிர்வாகிகள் அவரை, ஆடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.