பேசாத பேச்செல்லாம்..
நான் இஞ்சினியரிங் படிச்ச பொண்ணு. அப்பா பேராசிரியர். சட்டத்தை மதிச்சு நடக்கணுங்கிறது கூடவா தெரியாம இருப்பேன்?
வெளிநாட்டுக்காரங்க சிலர்லாம் ஷூ காலுடன் ஏறிட்டிருக்க, வெறும் பாதத்துடன் ‘சிவனே’னு சொல்லியபடியேதான் மலை ஏறினேன்.
மனசுக்கு நிறைவான கிரி தரிசனம். அதனால அங்க எடுத்த சில வீடியோக்களை என்னுடைய சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தேன்.
அங்கதான் பிரச்னை தொடங்கியிருக்குன்னு நினைக்கிறேன்.
கன்னா பின்னானு சில கமென்ட்டுகள். சாமி கும்பிடப் போன எங்களை அவ்வளவு ஹர்ட் பண்ணுற மாதிரி சில கமென்ட்டுகள்.
‘ரீல்ஸ் எடுக்கணுனே போயிருக்காங்க’, ‘கல்யாணத்துக்கு முன்னாடி தனியா ரெண்டு பேரும் ஏன் போனாங்க தெரியுமா’ன்னெல்லாம் எவ்வளவு கீழ்த்தரமா பேச முடியுமோ அவ்வளவு இறங்கிப் பேசியிருந்தாங்க சிலர். சில கமென்ட்டுகள் ‘அங்க போறதுக்கு அனுமதியில்லையே, எப்படிப் போனாங்க’ன்னும் இருந்தது.
அந்த மாதிரியான கமென்ட்டுகளைப் பார்த்த பிறகுதான், ‘விஷயம் சீரியஸானதா இருக்கும் போல’னு தோணுச்சு.
உடனே வனத்துறையை நாங்களே தொடர்பு கொண்டோம். நேரில் வரச் சொன்னாங்க. போனோம்.
எங்ககிட்ட பேசிய அதிகாரிகள், ‘ட்ரெக்கிங் போறதால மண் அரிப்பு உண்டாகி மழை நேரங்களில் பாறைகள் உருண்டு விழுகிற சம்பவங்கள் நடக்குது’னும், அதனால மலை உச்சிக்குச் செல்ல அனுமதி இல்லை’னும் சொன்னாங்க.