வேகமெடுக்கும் என்டிஏ கூட்டணி: அன்புமணியுடன் தொகுதி பங்கீடு ஓவர்,டெல்லி செல்கிறார் எடப்பாடி! – Kumudam

Spread the love

சட்டமன்ற தேர்தல் பணிகளில் அதிமுக வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. பாஜக தவிர வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கைகோர்க்காத நிலையில், அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி  சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி – அன்புமணி சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார், வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர். 

தொகுதி பங்கீடு ஓவர்-எடப்பாடி 

கடந்த முறை அதிமுக கூட்டணியில் 23-ல் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், சந்திப்பு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பாமக கூட்டணியில் இணைந்துள்ளது. விரைவில் மேலும் சில கட்சிகள் சேருவார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி.

அதிமுக தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில், வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கான திட்டங்களை கொடுக்க, 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். தேனீக்கள் போல செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டோம். மற்றதை பின்னர் அறிவிப்போம்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆட்சியை அகற்றவேண்டும்-அன்புமணி 

இந்த சந்திப்பு குறித்து அன்புமணி கூறியதாவது: அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். பாமகவும் இணைந்துள்ளது. இது மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியை அமைத்துள்ளோம். இது ஒரு வலுவான கூட்டணி. எங்களின் நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதாகும். ஊழல் நிறைந்த திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சி, அனைத்து தரப்பினருக்கும் எதிரான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். மிகப்பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி பெறும். நடைபயணத்தின் போது மக்கள் மிகவும் ஆதரவாக உள்ளனர். தேர்தல் எப்போது வரும் என மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்” இவ்வாறு அவர் கூறினார். அதிமுக கூட்டணியில் ராமதாஸ்  இணைவாரா என்ற கேள்விக்கு அன்புமணி பதில் அளிக்க சென்றுவிட்டார்.

அன்புமணி தரப்பு டிமாண்ட்

இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, எஸ்.பி.வேலுமணி இரண்டு முறை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது, கூட்டணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அன்புமணி முதலில் கூட்டணியில் பேச்சுவார்த்தை அழையுங்கள் என அமித்ஷா வேலுமணியிடம் கூறியிருந்தார். 

இதை தொடர்ந்து அதிமுக தரப்பு அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ராமதாசை கூட்டணியில் சேர்க்க கூடாது என அன்புமணி தரப்பு அதிமுகவிடம் நிபந்தனை வைத்தது. இதனை ஏற்று கொண்ட பிறகே இன்று எடப்பாடியை அன்புமணி சந்தித்து பேசியிருக்கிறார். 

பிற்பகல் டெல்லி செல்லும் எடப்பாடி  

இதனிடையே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விடம் 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை அன்புமணி தரப்பு கேட்டுள்ளது. இதில் 20 தொகுதிகள் வரை தர அதிமுக தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. தொகுதி ஒதுக்கீடு எந்த தொகுதி என்பதை பேசி கொள்ளலாம் என முடிவு செய்து, முதலில் கூட்டணியை அறிவித்து உள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று பிற்பகல் டெல்லி செல்ல உள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *