வேடசந்தூர்; செ., பாலாஜி ஆதரவாளருக்கு டிக் அடித்த திமுக; சிட்டிங் எம்எல்ஏ ஓரங்கட்டப்பட்ட பின்னணி!

Spread the love

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் வழங்கப்படவில்லை. மாறாக வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர்  வீரசாமிநாதனுக்கு சீட் வழங்கபட்டிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

வேடசந்தூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பவர் காந்திராஜன். தொகுதி முழுவதும் ஓரளவு பணிகளை செய்திருந்தாலும் திண்டுக்கல்லில் உள்ள கட்சியின் இரு தலைமைகளான அமைச்சர் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோரின் குட்புக்கில் இல்லாததாலேயே காந்திராஜனுக்கு சீட் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காலில் காந்திராஜன் விழுந்தது சர்ச்சையானது.

தனக்கு சீட் இல்லை என்பதால் தான் உதயநிதியின் காலில் விழுந்தார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போதைய திமுக வேட்பாளர் பட்டியலில் காந்திராஜனுக்கு பதிலாக சாமிநாதனுக்கு சீட் அறிவிக்கபட்டிருக்கிறது.

வேடசந்தூர் தி.மு.க எம்.எல்.ஏ காந்திராஜன்

யார் இந்த வீராசாமிநாதன்?

அமைச்சர் சக்கரபாணியின் ஆதரவாளராக இருந்த சாமிநாதனுக்கு அவர் மூலமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிமுகம் கிடைக்கிறது. சாமிநாதனின் செயல்பாடுகள் செந்தில் பாலாஜிக்கு பிடித்து போகவே அவருடைய நம்பிக்கைக்குரிய நபராக மாறினார்.

செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்த போது சாமிநாதனின் வீடுகளிலும் சோதனை நடந்தது. அந்தளவிற்கு செந்தில் பாலாஜியின் நெருக்கமான நபராக மாறியிருந்தார்.

வேடசந்தூர் தொகுதி கரூர் மக்களவை தொகுதிக்குள் வருவதால் செந்தில் பாலாஜியின் மூலமாக சீட் பெற முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிக்கும் முன்னரே தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ‘தனக்கு தான் சீட்’ என கூறி வந்தோடு கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார் சாமிநாதன்.

எம் எல் ஏ காந்திராஜனுடன், வீராசாமிநாதன்

இந்த விஷயம் தலைமைக்கு போகவே அவர்கள் அழைத்து சாமிநாதனை அமைதியாக்கியதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் சாமிநாதனை கத்தியால் குத்துவதற்கு வந்த நபரை பிடித்து அவருடைய காரிலேயே கொண்டு சென்று போலீசிடம் ஒப்படைத்தும் வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது வேடசந்தூர் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இவரை எதிர்த்து அதிமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்டவரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி.பி.பரமசிவம் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *