திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன். இவர் வேடசந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நிர்வாகிகளைச் சந்திப்பது, மக்களைச் சந்திப்பது எனப் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று வீராசாமிநாதனைச் சந்திப்பதற்காக திமுகவினர் சிலர் வந்திருந்தனர். அப்போது வீரா சாமிநாதனுக்கு பொன்னாடை போர்த்த வந்த இளைஞர் ஒருவர் சால்வையில் மறைத்து வைத்திருந்த சேவல் கத்தியால் வீராசாமிநாதனை கழுத்தில் குத்தினார்.
இதைத் தடுக்க முயன்ற வீராசாமிநாதனின் ஆதரவாளர் நாச்சிமுத்துவிற்கும் கத்திக் குத்து விழுந்தது.

உடனே காயமடைந்த வீராசாமிநாதன், வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அதனையடுத்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கத்தியால் குத்திய இளைஞரை வேடசந்தூர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.