ஆற்றங்கரையிலும் ஆலமரத்து அடியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு எளிமையாக அருள் பாலிப்பவர் பிள்ளையார். இவரை எல்லோரும் எப்போதும் வழிபடலாம், வழிபடவேண்டும் என்பதற்காகவே இப்படியாக அமைத்தனர் நம் முன்னோர்கள்.
அப்படிப்பட்ட விநாயகர் தலங்களுள் மிகவும் முக்கியமான பல தலங்கள் உண்டு. அப்படி, வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே உண்டான தலங்களில் முக்கியமானது சேண்பாக்கம்.
வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிகின்ற பாதையில், சுமார் 1.5 கி.மீ தொலைவில் சேண்பாக்கம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இத்தலம் காணாபத்யம் என்னும் கணபதி வழிபாட்டின் பிரதான தலமாக விளங்கியது.
இந்தத் தலத்துக்கு ஒருமுறை விஜயம் செய்த ஆதி சங்கரர் அங்கே லிங்க வடிவில் காணப்பட்ட 11 சுயம்பு மூர்த்திகளையும் கண்டு தரிசனம் செய்த போது அவருக்கு ஞானதிருஷ்டியில் விநாயகப்பெருமான் தெரிந்தார்.
11 சுயம்பு மூர்த்திகளும் விநாயகப்பெருமானே என்பதை அறிந்துகொண்டவர் அதை வெளிப்படுத்தினார். அன்று முதல் இத்தல மூர்த்திகளை விநாயகப்பெருமானாகவே வழிபட ஆரம்பித்தனர்.

ஆதியில் இந்தப் பகுதி செண்பக மரங்கள் நிறைந்திருந்த வனமாகக் காட்சி அளித்ததால் “செண்பகவனம்’ என்று அழைத்தனர். பின்னர், விநாயகர் சுயம்பு வடிவங்களாய் எழுந்தருளியதால் `ஸ்வயம்பாக்கம்’ என்று பெயர்பெற்றது. இந்தப் பெயரே பிற்காலத்தில் `சேண்பாக்கம்’ ஆனது என்கிறார்கள், ஆன்மிகப் பெரியோர்கள்.
பின்னர் இத்தலம் கால வெள்ளத்தில் சிதைவுற்றது. 17 ம் நூற்றாண்டின் போது மராட்டி மன்னர் துக்கோஜி ராவ் என்பவர் இப்பகுதிக்கு வந்தபோது அவரின் ரதம் திடீரென்று நின்றுவிட்டது. மன்னரும் மற்றவர்களும் திடுக்கிட்டுக் கீழே இறங்கிப் பார்த்தபோது ரதத்தின் சக்கரங்களில் ரத்தக் கறை காணப்பட்டது.
மன்னர் பதறினார். மிகுந்த சஞ்சலத்துடன் அன்று இரவு உறங்கப்போன மன்னரின் கனவில் கணபதிப் பெருமான் தோன்றினார். “உன் தேர் நின்ற இடத்தில் என்னுடைய ஏகாதச ரூபங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து அங்கு ஓர் ஆலயம் எழுப்புவாயாக” என்று உத்தரவிட்டார்.