அதுமட்டுமில்லாமல், ஜோதிடரின் அறிவுரைப்படி வி சென்டிமென்டில் விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, விருத்தாசலம், வில்லிவாக்கம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் களம் காணலாம் என்கிற தகவல்கள் கூட வெளியாகின.
அவ்வளவு ஏன் சமீபத்தில், கோவையில் விஜய்க்கு எழுந்த வரவேற்பைப் பார்த்து, கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட விஜய் முடிவே செய்துவிட்டார் என்கிற தகவல்கள்கூட வெளியாகின. கடந்தாண்டு மே மாதத்தில், மதுரை மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து, விஜய்யை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றிகள் என்று தவெகவினர் ஒட்டிய போஸ்டர் அரசியல் களத்தில் பேசுபொருளானது.
தொடர்ந்து, திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடப் போகிறார். அதனால்தான் அங்கே பிரசாரத்தைத் தொடங்கினார் எனச் சொல்லப்பட்டது. இந்தவரிசையில் தற்போது வேளச்சேரி வந்து சேர்ந்திருக்கிறது. அதற்குப் பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன.
முதலில் ஜோதிடர் அறிவுரைப்படி, வி சென்டிமென்டில் வேளச்சேரி வந்திருக்கிறது. அடுத்ததாக, முதல் தலைமுறை வாக்காளர்கள், சென்னையிலேயே செட்டிலாகிவிட்ட ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள், பெண்களின் வாக்குகள்.
கணிசமான சிறுபான்மையினர் வாக்குகள், அடுத்ததாக, எப்போதும் மாற்றத்தை வரவேற்கும் மக்களாக வேளச்சேரி மக்கள் இருப்பது (மக்கள் நீதி மய்யம் 23000 வாக்குகள், நாம் தமிழர் 14000 மக்கள்), 2011 முதல் உருவாக்கப்பட்ட தொகுதியாக இருப்பதால் எந்த ஒரு தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையில் பெரியளவில் செல்வாக்கு இல்லாமல் இருப்பது, தொடர்ச்சியாக மழை, வெள்ள பாதிப்புகளால் ஆளும் தரப்பின் மீதான அதிருப்தி என பல காரணங்களைச் சொல்லி வேளச்சேரியில் போட்டியிடலாம் என விஜயிடம் அறிவுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க, திரைத்துறையில் இருந்து வந்து அரசியல் கட்சி தொடங்கி, விஜய்க்கு முன்னோடியாக விளங்கும் எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன் தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தலில் தொகுதியை எவ்வாறு தேர்வு செய்தனர் என்று பார்ப்போம்.