ஷாருக்கான் கொடுத்த அறிவுரையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டன் வெங்கடேஷ் ஐயர் நினைவு கூர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: மிரட்டிய டிராவிஸ் ஹெட்: விராட் கோலி அளித்த பரிசால் சதமடித்த நிதீஷ் ரெட்டி!
வெங்கடேஷ் ஐயர் கூறியதென்ன?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் அண்மையில் நியமிக்கப்பட்ட நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கொடுத்த அறிவுரையை வெங்கடேஷ் ஐயர் நினைவு கூர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நான் இடம்பெறுவது குறித்து செய்திகள் பேசப்பட்டு வந்தன. அப்போது, நிகழ்காலத்தில் உள்ள போட்டிகளில் கவனம் செலுத்தாது, உலகக் கோப்பைத் தொடர் குறித்து யோசிக்கத் தொடங்கிவிட்டேன். கடைசியில், நான் இரண்டையும் தவறவிட்டு விட்டேன். அந்த அனுபவம் என்னுடைய வாழ்வில் திருப்புமுனையாக இருந்தது. நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அதிலிருந்து கற்றுக்கொண்டேன்.
இதையும் படிக்க: ஐபிஎல்லின் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி! புதிய விதிகள் என்ன?
அதன் பின், காயம் காரணமாக 6-8 மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது. அந்த இடைவெளி எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. மிகப் பெரிய விஷயத்தை அடைய வேண்டும் என்பதற்காக நிகழ்காலத்தில் உள்ள விஷயங்களை நாம் பாராட்ட மறந்துவிடுகிறோம். இவை என்னுடைய வார்த்தைகள் அல்ல. இதனை ஷாருக்கான் என்னிடம் கூறினார் என்றார்.
இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் ஐயர் 1,326 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.