ஓ.பி.எஸ்க்கும் அறிவாலயம் வருவதில் சில சங்கடங்கள் இருக்கும் என்பதை உணர்ந்த முதல்வர் தரப்பு, முக்கிய அமைச்சர்களின் படையோடு அவருக்கு வரவேற்பு கொடுத்தார்.
எ.வ.வேலு, கே.என்.நேரு, ரகுபதி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு என முக்கிய அமைச்சர்களெல்லாம் அறிவாலயத்தின் வாசலில் ஆஜராகியிருந்தனர். அதிமுகவினரை திமுகவில் இணைக்கும் அசைன்மெண்ட்டை ஏற்றிருக்கும் சேகர் பாபு ஓ.பி.எஸ் உடனே காரில் வந்தார்.
ஓ.பி.எஸ் இன் தேனியிலிருந்து தங்கத்தமிழ்செல்வனும் வரவைக்கப்பட்டிருந்தார். ஓ.பி.எஸ் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் போது தங்கத்தமிழ்செல்வனும் சேகர்பாபும்தான் உடனிருந்து பார்த்துக் கொண்டனர்.
ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்தாலும் அவரின் ஆதரவாளர்கள் பலரும் சட்டைப் பையில் ஜெ.வின் படத்தோடுதான் சுற்றி வருகின்றனர். அதேமாதிரி, ஓ.பி.எஸ் அறிவாலயத்திலிருந்து கிளம்புகையிலும் அவரின் காரில் ஜெயலலிதாவின் படம் அப்படியே இருந்தது.
‘கொஞ்சம் சங்கடமா இருந்தாலும் முதல்வர் அரவணச்சதுல அண்ணன் ஹாப்பிதான்’ என்கின்றனர் ஓ.பி.எஸ்க்கு நெருக்கமானவர்கள்!