இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மார்ச் 2026 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை தவறாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், நிலையான பறக்கும் படையினர், அறைக் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து வகை தேர்வு மையப் பணியாளர்களும், ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தனது செல்போன்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்துவிட்டு, இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் உறுதிமொழி சான்றினை பூர்த்தி செய்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒவ்வொரு அறையிலும் அறைக் கண்காணிப்பாளர்கள் வினாத்தாள்களை தேர்வர்களுக்கு வழங்கிய பின் மீதமுள்ள வினாத்தாள்களை அதே உறையினுள்ளிட்டு Cellotape கொண்டு Seal செய்து முதன்மைக் கண்காணிப்பாளர் துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். வினாத்தான் மீதம் எதுமில்லாத உறைகளையும் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இவ்வாறு பெறப்பட்ட அனைத்து உறைகளையும் கட்டாகக் கட்டி மீதமுள்ள வினாத்தாள்களுடன் வழித்தட அலுவலரிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.
விடைத்தாள் சேகரிப்பு மையங்களின் தொடர்பு அலுவலர்கள் இவ்வாறு பெறப்படும் வினாத்தாள் உறைகளிலிருந்து வினாத்தாள்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெற்று உறைகளை தனிக் கட்டுகளாகக் கட்டி அனைத்து தேர்வுகள் முடிவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
