ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் மலைத்தலம்!

Spread the love

அழகர்கோயில் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது மதுரை அழகர்மலையில் அமைந்திருக்கும் கள்ளழகர் திருக்கோயில்தான். அதற்கு நிகரான பெருமையோடும் அழகோடும் திகழ்கிறது ஒரு தலம்.

இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைத்தலத்தை ஒருமுறை தரிசித்தாலே மனம் லேசாவதுடன் வேண்டும் வரங்களும் விரைவில் கிடைக்கின்றனவாம். வாருங்கள் அத்தல மகிமையைக் காண்போம்.

ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செண்பகத்தோப்பு மலையடிவாரப் பகுதி. அங்கிருந்து சுமார் 7 கி.மீ. தூரம் மலைப் பாதையில் பயணித்தால் காட்டழகர் கோயிலை அடையலாம்.

செண்பகத்தோப்பு காட்டழகர்
செண்பகத்தோப்பு காட்டழகர்

முற்காலத்தில், மதுரை அழகர் மலையில் சுதபா தன் சாபம் நீங்க இம்மலைக்கு வந்து இங்கு பாயும் புண்ணிய நதியில் நீராடி பெருமாளை வழிபட்டார் என்கிறது தலபுராணம். வராக க்ஷேத்திரம் எனப்படும் இந்தக் காட்டு அழகர் மலையில் நூபுர கங்கையில் நீராடி சாபமும் நீங்கப்பெற்றார்.

அவருக்குக் காட்சியளித்த அழகரும் இங்கேயே கோயில்கொண்டு, காட்டு அழகர் என்று திருப்பெயர் பெற்றார். இப்போதும் கோயிலில், பெருமாளை வழிபட்ட நிலையில் காட்சி தருகிறார் சுதபா முனிவர். அவரின் சாபத்தைப் போக்கிய நூபுர கங்கை தீர்த்தமாக விழுந்துகொண்டிருக்கிறது.

இந்த அருவி எங்கு தொடங்குகிறது என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். ஆங்கிலேயர்களும் இந்த முயற்சியில் தோல்வியையே சந்தித்தார்களாம். காட்டு அழகர் கோயிலுக்கும் மேலே மலையின் உச்சியில் சப்த கன்னியர் கோயில் ஒன்று இருப்பதாகவும், அங்கிருக்கும் கன்னியர்கள் இந்த நூபுர கங்கையில்தான் தினமும் நீராடுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

மழைக்காலமோ, கோடைக்காலமோ இந்த நூபுர கங்கையில் விழும் தண்ணீரின் அளவு மாறுபடுவதே இல்லை என்றும் சிலாகித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

இந்த நூபுர கங்கைக்கு மற்றொரு பெயர் சிலம்பாறு. நூபுரம் என்றால் சிலம்பு. பெருமாளின் வாமன அவதாரத்தில், அவர் திரிவிக்கிரமாக வளர்ந்து விண்ணளந்தபோது, அவரின் தூக்கிய திருவடியை பிரம்மன் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகித்தார்.

அந்தத் தீர்த்தம் பகவானின் சிலம்பில் பட்டுத் தெறித்து விழ, அதுவே இந்த மலையில் நூபுர கங்கையாகப் பாய்வ தாக ஐதீகம். இதையொட்டியே சிலம்பாறு எனும் பெயர் வந்ததாம். மட்டுமின்றி ஆகாச கங்கை, மஞ்சுர நதி ஆகிய பெயர்களும் வழங்கப் படுகின்றன.

செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில்
செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில்

காட்டு அழகரை தரிசிக்க வரும் பக்தர்கள், இந்த நூபுர கங்கையில் நீராடிவிட்டே அழகரைத் தரிசிக்க மேலும் படியேறுகிறார்கள். அதாவது, நூபுர கங்கை இருக்கும் இடத்திலிருந்து மேலும் 247 படிகள் ஏறிச் செல்லவேண்டும். தமிழ் எழுத்துக்களைக் குறிக்கும் வகையில் 247 எனும் எண்ணிக்கையில் இந்தப் படிகள் அமைக்கப்பட்டனவாம்.

நூபுர கங்கையில் நீராடிவிட்டு, ஈர உடையுடன் இந்தப் படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்றால், `தர்மாத்ரி பர்வதம் – வராக க்ஷேத்திரம்’ எனச் சிறப்பிக்கப்படும் காட்டு அழகரின் திருக்கோயில் அமைந்துள்ளது.

உயர்ந்து திகழும் சிகரத்தின் அடிப்பாகத்தையொட்டி அமைந்துள்ளது, ஸ்ரீசுந்தரவல்லி- ஸ்ரீசௌந்தரவல்லி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயில். இந்தப் பெருமாளையே காட்டு அழகர் என்று பக்தியோடு அழைத்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். பெரியாழ்வார் தம் பாசுரங்களில் குறிப்பிடும் ‘தென் திருமாலிருஞ்சோலை’ எனும் இடம் இதுதான் என்கிறார்கள்.

கோயிலுக்குள் நுழைவதற்குமுன் காட்டு அழகரின் காவல் தெய்வமான கருப்பசாமியைத் தரிசிக்கலாம். காட்டு அழகரைத் தரிசிக்க வரும் அன்பர்கள் முதலில் நூபுர கங்கையில் நீராடிவிட்டு, அடுத்து இந்தக் கருப்பசாமியை வழிபட்டுவிட்டே கோயிலுக்குள் செல்லவேண்டும் என்பது மரபு.

அதன்படி, கருப்பரை வணங்கி உள்ளே நுழைந்து கருடாழ்வாரைத் தரிசித்தபின் அர்த்தமண்டபத்தில் நுழைந்தால், விசுவாமித்திரர், பழைய ஆதிகால பெருமாள், ஆஞ்சநேயர், மண்டூக மகரிஷி, ராமாநுஜர், விஸ்வக்சேனர் ஆகியோரைத் தரிசிக்கலாம்.

செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில்
செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில்

கருவறையில் நின்ற கோலத்தில் சேவை சாதிக் கிறார் பெருமாள். பெயருக்கேற்ப மிக்க எழிலுடன் திகழ்கிறார் பெருமாள். தாயார்களையும் பெருமாளையும் பிரார்த்தித்து வெளியேறி வலமாக வந்தால், கோயிலின் பின்புறத்தில் அந்த இயற்கை அதிசயத்தைக் காணலாம்.

கோயிலுக்குச் செல்லும்ன் வழி எங்கும் பசுமைப் பள்ளத்தாக்குகள் கண்களுக்கு விருந்தாகும். அங்கிருந்து நாம் தரிசிக்கும் மலை முகடுகள் பெருமாளின் சயனத் திருக்கோலம் போல இருக்கும் என்பதைச் சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் தரிசனத்தையொட்டியே இந்தத் தலம் `தர்மாத்ரி பர்வதம் – வராக க்ஷேத்திரம்’ எனச் சிறப்பிக்கப்படுகிறதாம்.

ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சுற்றியுள்ள 200 கிராமங் களுக்கு, இந்தக் காட்டு அழகரே குலதெய்வமாம். இந்த அழகரைத் தரிசித்து வழிபட்டுச் சென்றால், குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை வரம் கிடைக்கும், தீராத தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், நூபுர கங்கையில் நீராடினால் தீராத வியாதிகளும் தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை பொங்கச் சொல் கிறார்கள் பக்தர்கள்.

ஒருமுறை செண்பகத் தோப்பு தலத்துக்குச் சென்று காட்டு அழகரையும் அவர் மலையாய் சயனித்திருக்கும் அற்புதத்தையும் தரிசித்து வாருங்கள்; கவலைகளையெல்லாம் நீக்கி நல்வாழ்வு கிடைக்கும்.

குறிப்பு : மலைப்பகுதி என்பதால் கவனத்துடன் செல்வது நல்லது. வனவிலங்குகளும் குறிக்கிடலாம் என்பதால் தனியாகப் பயணிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *