கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி வரும் ஹைக்கூ கவிதைப் போட்டியை 5 ஆம் ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் இந்தாண்டிற்குரிய போட்டி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர். இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகையை தமிழ் இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், தொழிலதிபருமான ஆர்.சிவகுமார் விழாவுக்கான செலவுகள் மற்றும் பரிசுத்தொகையைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
இது குறித்து இயக்குநர் லிங்குசாமி நமக்களித்த பேட்டியில் கூட, “‘சிவக்குமார் சார் கவிதைகள் மீது மிகப்பெரிய ஆர்வமுள்ளார். அவர் பரிசுத்தொகை, செலவுகளைப் பொறுப்பேற்பதாலும், இந்த விழா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விழா என்பதாலும் இந்த விழாவை உண்மையாகவும் நேர்மையாகவும் நடத்தணும்னு நானே விரும்புறேன்” என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் போட்டி குறித்தும், லிங்குசாமி குறித்தும் ஆர்.சிவக்குமாரிடம் பேசினோம்.
”என்னோட சின்ன வயசுல இருந்தே கவிதைகள் மீது பிடிப்பு வந்திடுச்சு. எங்க வீட்டுல அப்பா ‘கணையாழி’, ‘தீபம்’, ‘கசடதபற’னு நிறைய இதழ்கள் வாங்குவாங்க. அங்கிருந்து தொடங்கிய வாசிப்பாலதான் கவிதைகளின் காதலனானேன்.
பாலகுமாரன், சுஜாதாவின் எழுத்துகளுக்குத் தீவிர வாசகன். மணிக்கணக்கில் அவரைப் பத்தி சிலாகித்துப் பேசுவேன். எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதைகளை, அந்தப் பக்கங்களைப் புகைப்படமாக எடுத்து வச்சுக்குவேன். நேரம் கிடைக்கையில் ரசித்து வாசிப்பேன். பயணங்களின்போது என்கிட்ட வாசிப்பதற்கு 300 கவிதைகளாகவது என் சேகரிப்பில் இருக்கும்.

ஒரு விமானப் பயணத்தின்போதுதான் லிங்குசாமியோட அறிமுகம் கிடைச்சது. என் பக்கத்து சீட்டுலதான் இருந்தார். அந்தச் சமயத்தில் அவரது முதல் கவிதை நூலான ‘லிங்கூ’ வெளியாகி இருந்ததால அவர்கிட்ட நான் உங்க கவிதை நூலை வாசிச்சிருக்கேன்னு சொன்னேன். அவர் சின்னதாகச் சிரித்தார்.