இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அதானி நிறுவனம் விளங்குகிறது. மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு பதவிக்கு வந்த பிறகு அதானி நிறுவனத்தின் வளர்ச்சி அசுரவேகத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் அதிகாரிகள் மின்கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ள இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இது குறித்து அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தவறான தகவல் கொடுத்ததாகவும் அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் எழுப்பப்பட்ட இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே பலமுறை அதானி நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்து மீண்டு வந்தது. இவ்விவகாரத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானிக்கு சம்மன் அனுப்பியது. அந்த சம்மன் அவர்களை சென்றடையவில்லை.
இந்த சம்மனை அனுப்ப பல வழிகளில் முயற்சி மேற்கொண்டும் பலனலிக்கவில்லை. இதற்காக மத்திய அரசின் உதவியையும் அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் நாடியது.
ஆனால் மத்திய அரசும் இதற்கு உதவி செய்யவில்லை. இதையடுத்து இவ்விவகாரத்தில் சம்மனை இமெயில் மூலம் அனுப்ப முடிவு செய்து இருக்கிறது. இதற்கு அனுமதி வாங்க நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் மனுத்தாக்கல் செய்து இருக்கிறது.