கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், அவருக்கு சொந்தமான ரூ. 37.64 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:
எனது சகோதரியின் கணவரை கடந்த 10 ஆண்டுகளாக இந்த அரசு வேட்டையாடி வருகிறது. தற்போதைய குற்றப்பத்திரிகை அந்த வேட்டையின் தொடர்ச்சியாகும்.
ராபர்ட், பிரியங்கா மற்றும் அவர்களது குழந்தைகள், மீண்டும் அரசியல் ரீதியில் தூண்டப்பட்ட அவதூறு மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில், நான் அவர்களுக்கு துணை நிற்கிறேன்.
அவர்கள் அனைத்து விதமான துன்புறுத்தல்களையும் தாங்கும் அளவுக்கு தைரியமானவர்கள் என்பதை நான் அறிவேன். இறுதியாக உண்மை வெல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.