திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்குடி பாரத்நகர், சக்திநகர் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால் இங்கு பல ஆண்டுகளாக தார்சாலை, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் தவித்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
தங்கள் படும் அல்லல்களை தீர்க்க பலமுறை மனுக்கள் அளித்தும் ஆட்சியில் உள்ளவர்களும், அதிகாரிகளும் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
மேலும், மழைக்காலங்களில் மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நிற்பதால் சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. சேறும் சகதியும் ஆக மாறிவிடுகிறது.
இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலையைப் பயன்படுத்த முடியாத அவல நிலை நிலவி வருகிறது.
இங்குள்ள மாணவர்கள் அந்தச் சாலையைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.