தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை வரும் பிப்.24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பது தொடர்பான, கூட்டுறவுத்துறையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறையின் செயலர் சத்தியபிரத சாஹூ, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகின்றன. இடங்கள், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து தரப்படுகிறது. ஆயிரம் முதல்வர் மருந்தகங்களில், 950-க்கும் மேற்பட்ட மருந்தகங்களுக்கு அனைத்து கருவிகள், சாதனங்கள் வழங்கப்பட்டு திறக்க தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் 1000 மருந்தகங்களை பிப்.24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளார். சுகாதாரத்துறை மூலம் குறிப்பிட்ட மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மருந்தகங்களுக்கு வழங்கப்படுகிறது. ஜெனிரிக் மருந்துகளுடன், பிற மருந்தகங்களையும் விற்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தனியார் மருந்தகங்கள், பிரதமரின் மருந்தகங்கள் என மருந்தகங்களில் இல்லாத வகையில் குறைந்த விலையில் மருந்துகள் இதில் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.