தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வருகின்ற நவம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால் அக். 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தீபாவளி: மூன்றரை நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்!
கனமழை
நவம்பர் 1ஆம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், நவம்பர் 2ஆம் தேதியும் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் வானிலை
நாளையும் தீபாவளி தினத்தன்றும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26-27 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும்.