கு.பாரதி பேசியதாவது, “தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்ட எந்த இடத்திலுமே அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்பட்டதில்லை. அதை இங்கே போராட்டத்தின் மூலம் சாதித்திருக்கிறோம். எங்கள் தொழிலாளர்கள் நான்கைந்து மாதங்களாக போராடியிருக்கிறார்கள்.
தங்களின் பணி மறுக்கப்பட்டதால்தான் அவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். ஆக, போராடிய ஐந்து மாதங்களுக்குமான ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். போராடிய சமயத்தில் தூய்மைப் பணியாளர்கள் மீதும் வழக்கறிஞர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 761 ரூபாய் ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும். அரசு எங்களுக்காக செய்திருக்கும் விஷயங்களுக்கு நன்றி. ஆனால், பணி நிரந்தரம் வேண்டிய எங்களின் போராட்டம் தொடரும்.
பிப்ரவரி 12 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடவிருக்கிறோம். நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை. தவெக உட்பட எல்லாருமே எங்களுக்கு பொதுவானவர்கள். கட்சிகளின் தேர்தல் அறிக்கைக் குழுக்களை சந்தித்து எங்களின் கோரிக்கைகளை தெரியப்படுத்துவோம். தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை எனில் சேப்பாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவோம்’ என்றார்.