கடந்த 13 ஆண்டுகளாக ஆழ்ந்த கோமா நிலையில் (Vegetative State) இருக்கும் 31 வயது இளைஞரான ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்துள்ளது.
2013-ஆம் ஆண்டு மொகாலியில் உள்ள தனது கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஹரிஷ் ராணா, அதன் பிறகு சுயநினைவின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வருகிறார். அவரது தந்தை அசோக் ராணா, தனது மகனின் துன்பத்தைப் பார்க்க முடியாமலும், சிகிச்சைக்குத் தேவையான நிதி வசதி இல்லாததாலும், மகனைத் தானாக மரணிக்க அனுமதிக்க வேண்டும் (Passive Euthanasia) என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை வழங்கிய மருத்துவ அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த அறிக்கையில், ஹரிஷ் ராணாவின் உடல் முழுவதும் படுக்கைப் புண்கள் (bed sores) அதிகமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதையும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“இந்த அறிக்கை மிகவும் மனவேதனையை அளிக்கிறது; அந்த இளைஞரை இதே நிலையில் தொடர்ந்து இருக்க விடுவது மனிதாபிமானமற்றது” என்று நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.