19 வயதில் 9 பேரை திருமண செய்த பலே பெண்: போலீசார் தேடுதல் வேட்டை  – Kumudam

Spread the love

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவர், தனது அத்தையுடன் சேர்ந்து திருமணமாகாத இளைஞர்களை ஏமாற்றி, நகை மற்றும் பணத்துடன் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த சம்பவம் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவர் இதுவரை 8 பேரை ஏமாற்றிய நிலையில், 9வது திருமணத்தில் வசமாகச் சிக்கியுள்ளார்.

ரயிலில் இருந்து மாயமான மணமகள் வாணி

ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த முத்திரெட்டி வாணி (19), கர்நாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு மணமகனுடன் ரயிலில் சென்ற வாணி, விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்தபோது, கழிவறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு ரயிலில் இருந்து இறங்கி மாயமானார். மணமகன் குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மற்றும் நகைகளுடன் அவர் தப்பிச் சென்றது தெரியவந்தது.

அத்தை சந்தியாவுடன் கூட்டுச் சதி

இதையடுத்து மணமகன் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், வாணி தன் அத்தை சந்தியாவுடன் சேர்ந்து இந்தத் தொடர் மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. திருமணமாகாத இளைஞர்களைத் திருமணம் செய்து, நகை மற்றும் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்வதைத் தொழிலாக வைத்துள்ளனர். கர்நாடகா, ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 8 இளைஞர்களை இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

தலைமறைவு மற்றும் புதிய புகார்கள்

9வது திருமணத்தில் சிக்கிய நிலையில், வாணியும் அவரது அத்தை சந்தியாவும் தலைமறைவாகி உள்ளனர். தனிப்படை போலீசார் இவர்களைத் தேடி வரும் நிலையில், வாணியால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட நாகிரெட்டி, கேசவரெட்டி ஆகியோர் தங்கள் திருமண ஆதாரங்களுடன் போலீசில் புதிதாகப் புகார் அளித்துள்ளனர். 19 வயது இளம் பெண் 9 பேரைத் திருமணம் செய்து ஏமாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *