தேர்தல் முடிவுகள் வெளியானபோது,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கே.டி.கே. தங்கமணி, பார்வதி கிருஷ்ணன் ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் முதன் முறையாக நாமக்கல் ஈ.வி.கே. சம்பத், திருவண்ணாமலை ஆர். தர்மலிங்கம் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றனர்.
சட்டமன்ற தேர்தலில், 204 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்றதால், காமராஜர் மீண்டும் முதலமைச்சர் ஆனார். சாத்தூர் தொகுதியில் இருந்து காமராஜர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
13 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை 4 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. வாக்கு விழுக்காடும் குறைந்தது.
சட்டமன்றத் தேர்தலை முதன் முறையாக சந்தித்த திமுக, 15 இடங்களில் வென்று தனது தேர்தல் அரசியல் கணக்கைத் தொடங்கியிருந்தது.

காஞ்சிபுரத்தில் அண்ணா, குளித்தலையில் கருணாநிதி, எழும்பூரில் அன்பழகன், திருவண்ணாமலையில் ப.உ.சண்முகம், வி.எஸ்.சந்தானம், ஆயிரம் விளக்கு ஆசைத்தம்பி, பெரம்பூர் சத்தியவாணிமுத்து, போளூர் தொகுதியில் களம்பூர் அண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆனந்தன், கள்ளக்குறிச்சி டி.நடராசன், ஆத்தூர் இருசப்பன், ஆத்தூர் எம்.பி. சுப்பிரமணியம், வளவனூர் ஏ.கோவிந்தசாமி, வேலூர் எம்.பி.சாரதி, விருத்தாச்சலம் எம்.செல்வராசு ஆகிய 15 பேர் திமுகவில் வெற்றி பெற்று இருந்தாலும், கட்சியின் முக்கியத் தலைவரான நெடுஞ்செழியன் சேலத்தில் கோழி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார்.
இரட்டை உறுப்பினர் தேர்வு இருந்த தேர்தல், அதில் திருவண்ணாமலை, ஆத்தூர், கள்ளக்குறிச்சி இரண்டு உறுப்பினர்களும் திமுகவாக தேர்வாகியிருந்தனர்.
திமுகவிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், அதிக வாக்குகள் பெற்று, இரண்டாமிடம் பிடித்தது திமுக. தேசிய கட்சிகளுக்கு மாற்றாக உதயசூரியன் உதித்தது 1957 சட்டமன்ற பொதுத் தேர்தலில்தான். திரைக்கவர்ச்சி என்று விமர்சித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது திமுகவின் தேசிய அரசியலுக்கு எதிரான தேர்தல் வெற்றி.
1957 ஏப்ரல் 13 பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சர் ஆனார். முதன் முதலாக சட்டமன்றத்தில் நுழைந்த திமுக 1957 மே 7 அன்று கொண்டு வந்த முதல் தீர்மானம், சென்னை மாநிலம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதுதான். 15 உறுப்பினர்கள் கொண்ட திமுகவின் தீர்மானத்திற்கு 42 வாக்குகள் கிடைத்தன. 127 வாக்குகள் எதிராக இருந்ததால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், அங்குதான் திமுகவின் அரசியல் ஆடுபுலி ஆட்டம் அடுத்தகட்டப் பாய்ச்சலைத் தொடங்கியது.!