சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, “அப்போலோ’ விண்கலத்தில் சென்ற வீரர்கள் நிலவில் கால் தடம் பதித்தபோது, ஒட்டுமொத்த உலகமே வியப்பில் உறைந்து போனது. அந்த வரலாற்றுத் தருணத்திற்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் பிரமாண்டமான கனவுதான் இந்த ஆர்டெமிஸ் II திட்டம்.
இது வெறும் விண்வெளிப் பயணம் மட்டுமல்ல; தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கும் சான்றாக அமையப்போகும் ஒரு புதிய சகாப்தம்.
தற்போது நிலவை நோக்கிப் பயணிக்கும் பாதையில் உள்ள இந்த விண்கலம், சமீபத்தில் பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்தில் இருந்து சில வியக்கத்தக்க புகைப்படங்களை அனுப்பி வருகிறது. குறிப்பாக, 1972-ல் அப்போலோ 17 எடுத்த புகழ்பெற்ற புகைப்படத்தோடு, தற்போது ஆர்டெமிஸ் II எடுத்துள்ள நவீனப் புகைப்படத்தை ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ள தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த ஒப்பீட்டில் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், 1972-ல் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற “ப்ளூ மார்பிள்” படம் தெற்கு முனை மேலேயும் வடக்கு முனை கீழேயும் இருக்கும்படி எடுக்கப்பட்டது, ஆனால் பிறகு அது மாற்றப்பட்டது. அதேபோல், புதிய படத்தில் பூமியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மின்னும் ‘அரோரா’ எனப்படும் துருவ ஒளிப்படலங்களும் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளன.