“கமலைப் போலவே ரஜினியிடமும் டெலிபோனிலேயே பேசி, பத்திரிகைக்கு விஷயம் வாங்கி விடலாம். சில நடிகர்களைப்போல `நேரே வாங்க, பேசலாம்’ என்று நம்மை அலைக்கழிக்க மாட்டார்.
இவரிடம் நான் கவனித்த பாராட்ட வேண்டிய ஒரு குணம்: மற்ற நடிகர்களைப் பற்றியோ நடிகைகளைப் பற்றியோ அநாவசியமாக `கமென்ட்” அடிக்க மாட்டார். ஏன், வாயையே திறக்க மாட்டார். ஒரு முறை பில்லா’ ஷூட்டிங்கின் போது இவரிடம் மற்ற நடிகர்களைப் பற்றியும் நடிகைகளைப் பற்றியும் வேண்டுமென்றே மெதுவாகப் பேசிப் பார்த்தேன். ஊம்! மூச்..! என் பேச்சை லாகவமாக இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதால் விட்டுக் கொண்டிருந்தார். அதே சமயம் சிரித்துக் கொண்டே வேறு எதைப் பற்றியோ எனக்கு சுவாரஸ்யமாக விளக்கிக் கொண்டிருந்தார்.
சில நடிகர்கள் நடிக்க செட்டுக்குள் வந்துவிட்டால் பேசுவதற்கு அல்லது பக்கத்து செட்டுக்கு என்று வெளியே போய் விடுவார்கள். ஆனால் ரஜினி அப்படியல்ல!
“நீங்கள் போகலாம்” என்று டைரக்டர் சொன்ன பிறகுதான் நகருகிறார்.
நாம் முன்பு எப்படி இருந்தோம். இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்க வேண்டும் என்று ‘பக்கா’வாகக் கணித்து வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.
எந்த முடிவு எடுப்பதானாலும் நிதானமாக – நன்கு யோசித்துத் தான் முடிவெடுப்பார்… கொட்டினோம், கவிழ்த்தோம் என்று பரபரக்கத் தன் சொந்தக் காரியங்களைச் செய்யமாட்டார்.”