சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,3-வது வழித்தடத்தில், ஒரு பகுதியாக ராயப்பேட்டையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை (ஆர்.கே.சாலை) நோக்கி 908 மீட்டர் வரையிலான சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி தொடங்கியது.
இந்த பணியை ‘பவானி’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் மேற்கொண்டு வருகிறது. தற்போது, மேல்பாதை பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இதுவரை 900 மீட்டர் வரை சுரங்கப்பாதை பணி முடிக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல, பசுமை வழிச்சாலை வடக்கு – மந்தைவெளி வரையிலான சுரங்கப்பாதை பணியும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்பணியில் ‘நொய்யல்’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஈடுபட்டுள்ளது மொத்தம் 762 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இதுவரை, 753 மீட்டர் மேல் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி வரும் வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களில் வந்தடையும்… இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “ராயப்பேட்டையில் இருந்து ஆர்.கே சாலை சுரங்கப்பாதையை “பவானி” சுரங்கம் தோண்டும் இயந்திரமும், பசுமைவழிச்சாலை வடக்கு -மந்தைவெளி வரையிலான சுரங்கப்பாதை பணியை “நொய்யல்” என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரமும் மேற்கொண்டு வருகின்றன. இவை ஆர்.கே. சாலை, மந்தைவெளியை சில நாட்களில் வந்தடையும்” என்றனர்.