அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய எடப்பாடி இரவு 11 மணிக்கு வெளியே வந்தார். இந்த சந்திப்பின் போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கபட்டதாக தெரிகிறது. இதில் திநகர், மயிலாப்பூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட சில தொகுதிகளை பாஜக கேட்கிறது.
அதே போன்று ஆறுபடை வீடுகளை உள்ளடக்கிய திருசெந்தூர், திருத்தணி, பழனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட என 35 தொகுதிகளை பாஜக கேட்கிறது. ஆனால் அதில் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் தொகுதிகளை இடம் பெற்றுள்ளது. அந்த தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதிகளை வழங்குவது குறித்து அமித்ஷாவிடம் எடப்பாடி கூறியுள்ளார். இன்னும் சில தினங்களில் தொகுதி பங்கீட்டை முடித்து மார்ச் 6-ம் தேதி தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிட எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.
போலீஸ், கலெக்டர்கள் மீது புகார்
தமிழகத்தில் உள்ள மாவட்ட எஸ்பிக்கள், கலெக்டர்களை மாற்ற வேண்டும் என்று ஒரு பட்டியலை எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. பட்டியலை பெற்றுக் கொண்ட அமித்ஷா, இதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கேள்வி : கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதா? புதிய கட்சிகள் ஏதாவது அதிமுக கூட்டணிக்கு வர இருக்கிறதா?
எடப்பாடி : சில கட்சிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். வருவதற்கு வாய்ப்பு உண்டு.
கேள்வி : சசிகலா ஏற்கெனவே அதிமுகவில் இருந்தவர். அவருடைய கட்சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கா? நேற்று நடந்த கூட்டத்தில் இதைப்பற்றி பேசியதாக சொல்லப்படுகிறதே?
எடப்பாடி : அதைப்பற்றி பேசவில்லை. இதை விடுங்கள். நீங்களாக காது, மூக்கு வச்சு பேச வேண்டாம்.
கேள்வி : தொகுதிப் பங்கீடு ஆரம்பித்துவிட்டதா?
எடப்பாடி : விரைவாக ஆரம்பிக்கப்படும். தேர்தல் இன்னும் அறிவிக்கவில்லையே.
கேள்வி : தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் தொகுதிப் பங்கீடு நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கி்றாரே?
எடப்பாடி : தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எங்கள் கூட்டணி சுமுகமாக இருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குழப்பம் இருப்பதை பத்திரிகை, ஊடகங்களிலும் வரும் செய்தியை வைத்து கணிக்க முடிகிறது. அந்த கூட்டணியில்தான் பிரச்னை இருக்கிறதே ஒழிய, அதிமுக – தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றாக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருகின்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அமித்ஷா – எடப்பாடி ஆகியோர் டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை பிற்பகல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், பாஜ தரப்பில் இருந்து அதிக தொகுதிகள் கேட்பது குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
