தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி, “கல்வி, மருத்துவம், சுகாதாரம் எனப் பல துறைகளில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பெண்கள் ஒரு நல்ல நிலையை எட்டியுள்ளனர். ஆனால், இவ்வளவு முன்னேற்றங்களுக்குப் பிறகும் பெண்கள் இன்றும் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழலே நிலவுகிறது.
தமிழகத்தில் 2 வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும், உடல் ரீதியான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.

முன்பெல்லாம் இளைஞர்களும், பெரியவர்களுமே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இன்று 10 முதல் 12 வயது சிறுவர்கள்கூட இத்தகைய கொடுமைகளில் ஈடுபடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்குத் தமிழகத்தில் பெருகி வரும் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களே முக்கியக் காரணமாகும். கடந்த 5 ஆண்டுகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே போதை மாத்திரைகள் தடையின்றிக் கிடைக்கும் அளவிற்குப் போதைப் கலாசாரம் தலைவிரித்தாடுகிறது.