மதுரை: கல்யாணம் செய்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்போது இன்னொருவரை காட்டி அவரை கல்யாணம் செய்து கொள்வீர்களா? என கேட்பது போல 2026 இல் அதிமுகவுடன் கூட்டணியா என கேட்பது என்று கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பல பிரச்னைகள் உள்ள அதிமுகவில் நான் எதையாவது பேசி புது பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை என்று கூறினார்.
நடிகர் சிவாஜி கணேசனின் நினைவுநாளையொட்டி மதுரையில் உள்ள சிவாஜி சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், மாநிலத்தில் திமுக பெரும்பான்மை கட்சி.தேசிய அளவில் காங்கிரஸ் பெரும்பான்மை கட்சி. காங்கிரஸ்-திமுகவிற்கு இடையே கூட்டணி பகிர்வு நல்ல முறையில் உள்ளது. கருணாநிதி கூட மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட போது வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தார்.
அமைச்சரவையில் இடம் என்பது எம்எல்ஏ, எம்.பி எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டால் தான் அந்த பிரச்சனை வரும்.
காங்கிரஸ் கட்சி 2026 இல் அமைச்சரவில் இடம் பெற வேண்டும் என பேசுவது குற்றமாகாது. இதையெல்லாம் பேசாமல் எப்படி கட்சியை வளர்க்க முடியும்? அதற்காக கட்டாயமாக அமைச்சரவையில் இடம் பெற்றே ஆக வேண்டும் என்றும் சொல்ல முடியாது, அவ்வாறு பேசுவதையும் தவறு என்றும் சொல்ல முடியாது.
இந்தியா முழுவதும் ஒரே நாடு. மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது விருப்பமாக இருக்கலாம். ஆனால் மாநில மக்களுக்கே 100 சதவீதம் வேலைவாய்ப்பு எனக்கூறுவது தவறு. பிறகு இந்தியா எப்படி ஒற்றுமையான நாடாக இருக்க முடியும். பிற மாநிலங்கள் மற்றும் மொழி பேசுகிற மக்களுக்கு வாய்ப்பு இல்லை என்பது சரியான கருத்தாக இருக்க முடியாது.
அதிமுகவில் ஏற்கனவே பல பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கும் போது நான் எதையாவது சொல்லி ஒரு புது பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை. நான் காங்கிரஸ் கட்சியில், வேறு கூட்டணியில் உள்ள போது அதிமுகவையோ அல்லது சசிகலாவையோ விமர்சித்து பேச விரும்பவில்லை. நானே தேவையென்றால் பேசுவேன்.
நானும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி உருவாக வேண்டும் என்று பேசியவன்தான். நான் தங்கபாலு, இளங்கோவன் என எல்லா தலைவர்களும் சொன்னதைத்தான் தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகையும் பேசுகிறார்.