மயிலாடுதுறை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் 8-வது மகளிர் பெருவிழா மாநாடு நேற்று நடைபெற்றது. தலைமை வகித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த பிரதமர் மோடி, தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்று கூறி, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை உதாரணமாக காட்டினார்.
தமிழகத்தில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்காக பெரிய போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கவும் முதல்வர் முன்வர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், தமிழகத்தில் உள்ள 320 சமுதாயங்களின் மக்கள் நிலை தெரியவரும். அதை செய்ய முதல்வர் ஏன் தயங்குகிறார்? மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை கருணாநிதி கொடுத்தார். அதனால், 108 சமுதாய மக்கள் பயன்பெற்றனர். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, சரித்திரத்தில் இடம்பெறுமாறு முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
மது, கஞ்சா விற்பவர்களைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும். மது விற்பனைக்கு எதிரான போராட்டத்துக்கு அழைத்தால், நான் நிச்சயம் கலந்துகொள்வேன். 2026-ல் மக்கள் விரும்பும் வகையில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன். வேறு யார் எது சொன்னாலும் நீங்கள் கேட்க வேண்டியதில்லை. நான் சொல்வதுதான் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வரும் 17-ம் தேதி நடைபெறும் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதித்து, கட்சியினரின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது” என்றார். நிகழ்ச்சியில், ராமதாஸ் மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் காந்தி, பேரன் சுகந்தன், மாநாட்டுக் குழுத் தலைவரும், வன்னியர் சங்க மாநிலத் தலைவருமானபு.தா.அருள்மொழி, பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டு முகப்பு, மேடையில் அன்புமணி படம் இடம்பெறவில்லை. ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி, காடுவெட்டி குரு மற்றும் வன்னியர் சங்க சின்னம் ஆகிய படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.
14 தீர்மானங்கள் நிறைவேற்றம்: பெண்களுக்கான நாடாளுமன்ற சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.